ஞாயிறு, 13 மே, 2018

கண்ணே இறைவன் பாதம் (திருவடி) என்பதை உறுதிபடுத்தும் .....




கண்ணே இறைவன் பாதம் (திருவடி) என்பதை உறுதிபடுத்தும் சிலவற்றை காண்போம்:-->


1. கடோபநிஷத்தில் எமதர்மனிடம் நசிகேதன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார்


“இறைவன் மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்.”


2. கீதையில் கிருஷ்ண பகவான் “மந்திரங்களில் நான் காயத்ரி” என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் “எல்லாவற்றிற்கும் மேலான அப்பெரோளி கடவுளை தியானிப்போமாக என்பதே.”


3. திருமூலநாயனார் திருமந்திரத்தில் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். தண்ணீர் ஊற்றும் பாத்திரத்தில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு . அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும். அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும் என ஞான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார் திருமூலர்.


4. “நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந்தூங்கலுமாமே” என்கிறார் திருமூலர். நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.


5. “பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ.” என்கிறார்கள் சித்தர்கள். கருவிழிக்குள் பிராணநீர் உள்ளது. அதில் தான் கண்மணி மிதந்து கொண்டிருக்கிறது.


6. “ஊசிமுனை காட்டுக்குள் உலாவியே இருக்கலாம் வாரீர்” என்கிறார் ஒரு சித்தர்.


7. “கண்மணி ஊசிமுனை வாசலுக்குள் பிரவேசித்தால் அது பெருங்காடாமே” என்கிறார் ஒரு சித்தர்.


8. “அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் ஒற்றி கடலருகே நிற்கும் கரும்பு” என்கிறார் பட்டினத்தார். கரும்பு என்பது கரும் - பு , கருப்பு பூ. அது கண்மலரையே குறிக்கும்.


9. கண்ணில் ஒளியை உணர்ந்து கண்ணை விழித்து பேசாது சும்மா இரு என்பதுவே ஆதிகுரு தட்சிணாமூர்த்தி சொல்லாமல் உணர்த்திய ஞான இரகசியம்.


10. சின்முத்திரை என்பது கண்ணையே குறிக்கும்.


11. ஒன்றான கடவுளோடு நான் ஒன்ற நம் கண் ஒளியில் சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே வழி.


12. விழி தான் ஞானம் பெற ஒரே வழி. விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே நம் கடமை.


13. பரப்பிரம்மமான, அண்டம் போல் அழகான கண்மணியின் உச்சியான புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி” என்கிறார் சித்தர் காகபுசந்தர்.


14. “கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று புருவம் கண் என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் வள்ளல் பெருமான். வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.


15. அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் எது? சொல்ல வல்லார் உண்டானால் குரு என பணியலாமே என்கிறார் ஒரு சித்தர். (அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் கண்)


16. புருவமத்தி, நடுமூக்கு என பரிபாசையாக சொல்லப்படுவது கண்ணே.


17. பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர். இருதயம் என்பதை பிரித்து பாருங்கள். இரு + உதயம் . நம் உடலில் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதைத் தான் இந்த சூரிய , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள். இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவு மில்லாமல் கூறி உள்ளார்.


18. கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும். கண் + அவன் = கண்ணன். இந்த கண்ணனை – கண் ஒளியைத் தான் நாம் தியானிக்க வேண்டும்.


19. வள்ளலார் திருவருட்பாவில் கண்ணே இறைவனை அடையும் வழி என பல்வேறு பாடல்களில் தெரிவிக்கிறார்.


20. “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” – திருக்குறள்


21. “கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான் மண்ணுமுயிர் பதியுமாறு” – காகபுசுண்டர்


22. “நேத்திரத்தை காகம்போல் நிச்சயமாய் நிற்க ஆத்துமத்தில் ஆனந்தமாம்” – காகபுஜண்டர்.


மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய் என்று எண்ணிக்கொண்டிருப்பது அறியாமையே!

இனியாவது உணர்வீரோ! அருட்பெருஞ்ஜோதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts